இன்றைய காலத்தில் சைவத்தை விரும்புபவர்களை விட அசைவ சுவைக்கு அடிமையாகி அசைவத்தை சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே அதிகமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை சைவத்தை சாப்பிட சொல்லும்பொழுது அவர்கள் சாப்பிட மறுப்பார்கள். அதையும் மீறி சாப்பிட்டாலும் முழு விருப்பத்துடனும் ஆசையுடனும் சாப்பிட மாட்டார்கள். அசைவ பிரியர்கள் சைவத்தை விரும்பி சாப்பிடும் வகையில் சைவத்தை வைத்து அசைவ சுவையில் பலவிதமான உணவுப் பொருட்களை செய்ய முடியும். அப்படிப்பட்ட உணவு பொருட்களில் ஒன்றான மீல் மேக்கரை வைத்து சிக்கன் மசாலா செய்யும் முறையைப் பற்றி இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
மீல் மேக்கர் – ஒரு கப்
சீரகம் – 1 1/2 ஸ்பூன்,
மல்லி – ஒரு ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்,
சோம்பு – ஒரு ஸ்பூன்
பட்டை – ஒரு துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
காய்ந்த மிளகாய் – 5
எண்ணெய் – 2 ஸ்பூன்,
கருவேப்பிலை – ஒரு கொத்து
வெங்காயம் – ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் – 1/2 டீஸ்பூன்
சிக்கன் மசாலா – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
– Advertisement –
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து மீல் மேக்கரை அதில் போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். மீல்மேக்கரை வடிகட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். மீல்மேக்கர் ஆறியதும் அதில் இருக்க கூடிய தண்ணீரை சுத்தமாக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சீரகம் ஒரு ஸ்பூன், மல்லி, மிளகு, சோம்பு, பட்டை கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் மூன்று போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.
இவை அனைத்தும் வறுபட்ட பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். இப்படி தயார் செய்த பொடியில் இருந்து இரண்டு ஸ்பூன் அளவு பொடியை எடுத்து நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் மீல்மேக்கரில் போட்டு நன்றாக பிரட்டி விட வேண்டும்.
– Advertisement –
இப்பொழுது மறுபடியும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலையை போட வேண்டும். சீரகம் பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் லேசாக நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு வதக்க வேண்டும். இவற்றின் பச்சை வாடை போன பிறகு இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சிக்கன் மசாலா, தேவையான அளவு உப்பு இவை அனைத்தையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
இதன் பச்சை வாடை போன பிறகு நாம் ஏற்கனவே மசாலா போட்டு பிரட்டி வைத்திருக்கும் மீல் மேக்கரை அதில் சேர்த்து அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி மூண்று நிமிடம் குறைந்த தீயில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும். மூன்று நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான சோயா சிக்கன் மசாலா தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: ரோஸ் பிஸ்தா தேங்காய் பர்பி
அசைவம் சாப்பிட முடியாத நேரத்தில் அசைவ சுவையை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு சைவத்தை வைத்தே அசைவ சுவையை கொடுத்துவிடலாம். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். சுவையில் மெய்மறந்து போவார்கள்.