இன்றைய காலத்தில் பலரும் ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்து விட்டு வாய்க்கு ருசியான உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக குழந்தைகள் தங்களுடைய ஆரோக்கியத்திற்கு தேவையான கீரை வகைகள் மற்றும் காய்கறிகளை உண்பதை தவிர்த்து விட்டு, மசாலாக்கள் அதிகம் சேர்த்த உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் ஆரோக்கிய சீர்கேடு ஏற்படுகிறது. அதை தவிர்த்து அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கும் அளவிற்கு செய்யக்கூடிய ஒரு புலாவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
வல்லாரைக் கீரை – 2 கைப்பிடி அளவு
புதினா – ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 4
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
தயிர் – 2 டீஸ்பூன்
பாஸ்மதி அரிசி – 2 கப்
விரும்பிய காய்கறிகள் – ஒரு கப்
பட்டை – 3
கிராம்பு – 3
அன்னாச்சி பூ – ஒன்று
தக்காளி – ஒன்று
வெங்காயம் – ஒன்று
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஜாதிபத்திரி – 1/2
பிரிஞ்சி இலை – 3
சோம்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் – 2
கல்பாசி – 2
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 4 கப்
– Advertisement –
செய்முறை
முதலில் வல்லாரை கீரையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி அதில் கீரையை போட்டு லேசாக வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு வல்லாரைக் கீரை தான் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. வேறு எந்த கீரையை வேண்டுமானாலும் நாம் பயன்படுத்தலாம்.
அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். கீரை நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து விட்டு அதில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தயிர் போன்றவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து 25 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப புலாவில் போடுவதற்கு தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதில் கேரட், பட்டாணி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, மீல் மேக்கர், பீன்ஸ்,பன்னீர், காளான் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். காய்கறிகள் சேர்க்காமல் இந்த புலாவை நாம் செய்யலாம்.
– Advertisement –
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெயை ஊற்றி அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யும் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெயும் நெய்யும் நன்றாக காய்ந்த பிறகு தாளிப்பதற்காக நாம் எடுத்து வைத்திருக்கும் பட்டை, கிராம்பு, அண்ணாச்சி பூ, ஜாதிபத்திரி, பிரிஞ்சி இலை, சோம்பு, சீரகம், ஏலக்காய், கல்பாசி போன்றவற்றை போட வேண்டும். இவை அனைத்தும் பொரிந்ததும் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு நீளவாக்கில் நறுக்கிய தக்காளியையும் அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
தக்காளியும் வதங்கிய பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் கீரை விழுதை அதில் சேர்த்து அதன் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பச்சை வாடை நீங்கிய பிறகு நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை அதில் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு போன்றவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள். காய்கறிகள் வெந்த பிறகு நான்கு கப் தண்ணீரை அதில் ஊற்றி மூடி போட்டு தண்ணீரை கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் நாம் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை அதில் சேர்த்து ஒரு முறை லேசாக கலந்து மூடி போட்டு மிதமான தீயில் ஐந்து நிமிடம் வைத்திருக்க வேண்டும்.
– Advertisement –
ஐந்து நிமிடம் கழித்து ஒருமுறை கரண்டியை வைத்து லேசாக கிளறிவிட்டு அதற்கு மேல் மீதம் இருக்கக் கூடிய நெய்யை ஊற்றி மூட வேண்டும். இப்பொழுது அடுப்பில் இருந்த அந்த கடாயை இறக்கி ஒரு தோசை கல்லை வைத்து தோசை கல்லுக்கு மேல் கடாயை வைக்க வேண்டும். குறைந்த தீயில் 15 நிமிடம் இது அப்படியே இருக்கட்டும். 15 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். சுவையான வல்லாரைக்கீரை புலாவ் தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: பலாக்கொட்டை தோசை செய்முறை
இன்றைய காலத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணி, புலாவ் போன்றவற்றிற்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதால் சத்தான வல்லாரை கீரையை இந்த முறையில் புலாவாக செய்து தரும் பொழுது கண்டிப்பாக முறையில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.