பெண்களுக்கு வரப் பிரசாதமாக திகழக்கூடிய கருப்பு உளுந்தை பெண் குழந்தைகள் சாப்பிட மாட்டேன் என்கிறார்களா? இப்படி அடையாக சுட்டுக் கொடுத்துப் பாருங்கள். இன்னும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்.

Samayal Kurippugal

கருப்பு உளுந்தில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் கருப்பு உளுந்தை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அதிகப்படியான உதிரப்போக்கு குறையும். மேலும் மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலிகளும் குறையும். ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கும். ரத்த சோகையை நீக்கும். இதயத்தையும் எலும்பையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளும். இப்படி கருப்பு உளுந்தில் பலவிதமான நன்மைகள் இருக்கின்றன. இருப்பினும் பலரும் அதை உணவாக எடுத்துக் கொள்ள தயங்குகிறார்கள். அப்படி எந்தவித தயக்கமும் இல்லாமல் எளிமையான முறையில் உணவாக எடுத்துக் கொள்வதற்கு கருப்பு உளுந்து அடை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து – ஒரு கப்
பச்சரிசி – ஒரு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – ஒரு கொத்து
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

– Advertisement –

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு முழு கருப்பு உளுந்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் பச்சரிசியும் சேர்த்து மூன்று முறை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி ஊற்றி விடுங்கள். பிறகு நல்ல தண்ணீர் ஊற்றி ஐந்து மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 5 மணி நேரம் ஊறிய பிறகு உளுந்தை எடுத்து விரல்களால் அமுக்கினால் உளுந்து உடைந்து தனியாக வரவேண்டும். அந்த அளவிற்கு ஊறி இருக்க வேண்டும்.

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் இல்லாமல் நாம் ஊற வைத்திருந்த உளுந்து மற்றும் பச்சரிசியை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் இரண்டு ஸ்பூன் என்று வேண்டுமானாலும் தண்ணீர் ஊற்றலாம். அதற்கு மேல் தண்ணீர் ஊற்றக்கூடாது. கொரகொரப்பாக அரைத்த இந்த கருப்பு உளுந்து மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

– Advertisement –

இப்பொழுது பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக கிள்ளிய கருவேப்பிலை இவற்றை சேர்த்து இதனுடன் சீரகம், பெருங்காயத்தூள், உப்பு போன்றவற்றையும் சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ளுங்கள். இந்த சமயத்திலும் நாம் தண்ணீர் சேர்க்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. வெங்காயத்தில் இருக்கக்கூடிய தண்ணீரே இதற்கு போதுமானதாக இருக்கும்.

இப்பொழுது அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் சூடானதும் எண்ணெயில் ஊற்றிக் கொள்ளுங்கள். நாம் பிணைந்து வைத்திருக்கும் இந்த மாவில் இருந்து சிறிது மாவை எடுத்து உருண்டையாக உருட்டிய அந்த தோசை கல்லில் வைத்து விரல்களை வைத்தே நன்றாக மெல்லியதாக தட்ட வேண்டும். ஒருவேளை தோசை கல்லில் வைத்து தட்ட தெரியாது என்பவர்கள் ஒரு பாலிதீன் கவரையோ அல்லது வாழையிலையோ வைத்து அதில் எண்ணெய் தள்ளி அதன் மீது மாவை வைத்து தட்டி பிறகு தோசை கல்லில் போடலாம்.

– Advertisement –

ஒரு பக்கம் சிவந்த பிறகு அதை திருப்பி போட்டு மறுபடியும் லேசாக எண்ணெய் ஊற்றி மறுபுறம் வேகவைக்க வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் இதில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு புறமும் வெந்த பிறகு இதை அப்படியே எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளலாம். இதற்கு தொட்டுக் கொள்வதற்கு நாம் எப்பொழுதும் இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளக்கூடிய அனைத்து விதமான சட்னி, குழம்பு வகைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:தேங்காய் திரட்டி ஹல்வா

இந்த முறையில் கருப்பு உளுந்தை வைத்து அடை செய்து கொடுத்து பாருங்கள். கருப்பு உளுந்தா என்று கேட்கும் அளவிற்கு சுவையும் அபாரமாக இருக்கும். வீட்டில் இருக்கக்கூடிய சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.